ஹங்கேரியில் 3 பிள்ளை பெற்றால் $36,000

Hungary

ஐரோப்பிய நாடுகளில் அதிவேகமாக சனத்தொகை குறையும் நாடுகளில் ஒன்று ஹங்கேரி (Hungary). இந்நாட்டின் சனத்தொகை வருடம் ஒன்றில் 32,000 ஆல் குறைந்து வருகிறது. இந்நாட்டில் சனத்தொகையை அதிகரிக்க இந்நாட்டு அரசாங்கம் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அவற்றுள் ஒன்றாக இளம் தம்பதிகளுக்கு $36,000 (10 மில்லியன் உள்நாட்டு நாணயம், forint) வட்டியில்லா கடன் வழங்கப்படும். அந்த தம்பதிகள் 3 பிள்ளைகளை பெற்ற பின் அவர்களின் கடன் இரத்து செய்யப்படும்.
.
ஐரோப்பா முழுவதும் பிற நாட்டு அகதிகளும், குடிவரவாளரும் படையெடுக்கும் இக்காலத்தில், அந்நியருக்கு எதிரான கொள்கைகளை கொண்ட தற்போதை வலதுசாரி அரசு ஹங்கேரின் குழந்தைகளையே அதிகரிக்க விரும்புகிறது. அதி சாத்தியமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். ஹங்கேரியர் போதிய குழந்தைகளை பெற தவறின், அவர்களும் பின்னர் அந்நியரை நாடவேண்டி இருக்கும். நீண்ட காலமாக அந்நியரை நிராகரித்து வந்த ஜப்பான் தற்போது தெரிவு செய்த அந்நியருக்கு குடியுரிமை வழங்கி வருகிறது.
.
கடன் உதவியுடன், வீட்டு வசதிகள், 21,000 புதிய குழந்தைகள் பராமரிப்பு நிலையங்கள் என்பற்றையும் ஹங்கேரி அரசு நடைமுறை செய்யவுள்ளது.
.
தற்போது சராசரியா ஹங்கேரியன் தாய் ஒன்றுக்கு 1.45 குழந்தைகள் மட்டுமே பிறக்கின்றன. ஒரு நாட்டின் சனத்தொகையை மாறாது வைத்திருக்க, தாய் ஒன்றுக்கு சுமார் 2.1 குழந்தைகள் பிறக்க வேண்டும். ஐரோப்பிய பிறப்பு விகிதம் 1.58 ஆக உள்ளது.
.
தாய்வானில் தாய் ஒன்றுக்கு 1 குழந்தை மட்டுமே பிறக்கின்றது. தென்கொரியா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் தாய் ஒன்றுக்கு 1.2 குழந்தைகள் பிறக்கின்றன. ஜப்பானில் இது 1.3 ஆக உள்ளது. சீனாவில் இது 1.6 ஆக உள்ளது.
.
உலகின் அதிகூடிய பிறப்பு விகிதம் மேற்கு ஆபிரிக்காவில் உள்ள நிஜெர் (Niger) நாட்டிலேயே உள்ளது. அங்கு தாய் ஒன்றுக்கு 7.24 குழந்தைகள் பிறக்கின்றன.
.