கொரோனாவின் அடிமுடி தேடும் மருத்துவம்

Pangolin

பொதுவாக ஒரு புதிய நோய் பரவும்போது அதன் காரணி, குணம், காவி போன்றவற்றை விஞ்ஞானம் தேடும். அவ்வாறு தேடிய அறிவை பயன்படுத்தியே அந்த நோயை குணப்படுத்தும் மருந்து, அந்த நோயை தொற்றாது தடுக்கும் மருந்து போன்றவற்றை தயாரிக்க முடியும்.
.
ஆனால் கொரோனாவின் காரணி, குணம், காவி எல்லாவற்றையும் விஞ்ஞானம் திடமாக அறிய முடியாது உள்ளது. கொரோனா தொற்றின் ஆரம்பத்தில் கூறிய விஞ்ஞான கருத்துக்களுக்கு முரணான கருத்துக்கள் தற்போது கூறப்படுகின்றன.
.
பிரித்தானிய மற்றும் ஜெர்மன் விஞ்ஞானிகள் இன்று வெளியிட்ட தமது ஆய்வுகளின்படி கொரோனா வரைஸ் A, B, C, ஆகிய மூன்று வகைகளாக பிரிக்கப்பட்டு உள்ளன. அவற்றின் பரம்பலும் முன்னர் கணிக்கப்பட்ட பரவலுக்கு மாறாக உள்ளது. இந்த ஆய்வுக்கு டிசம்பர் 24 ஆம் திகதி முதல் மார்ச் 4 வரை பெறப்பட்ட 160 முழுமையான genomes பயன்படுத்தப்பட்டு உள்ளன.
.
A வகை கொரோனா வௌவ்வால் (bat) மற்றும் எறும்பை விரும்பி உண்ணும் அளுங்கு (pangolin) ஆகியவற்றில் காணப்படும் வரைஸ் என்று கூறப்படுகிறது. இந்த வகை வூஹானில் காணப்பட்டு இருந்தாலும் அவை அங்கு பிரதானமாக காணப்படவில்லை (not the primary). அமெரிக்கா மற்றும் அஸ்ரெலியா ஆகிய நாடுகளில் கொரோனா தொற்றியோரிடம் வகை A இருந்துள்ளது.
.
வூஹானில் பிரதானமாக காணப்பட்டது B வகை வைரைஸ். இது A யில் இருந்து மருவி இருக்கலாம். இந்த வகை கிழக்கு ஆசியாவுக்கு அப்பால் பெருமளவில் பரவில்லை.
.
இத்தாலி, பிரான்ஸ், பிரித்தானியா, சுவீடன் ஆகிய ஐரோப்பிய நாடுகளில் பிரதானமாக காணப்பட்டது C வகை. இந்த C வகை, B வகையின் சந்ததி என்று வகைப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த வகையே சிங்கப்பூர், ஹாங் காங், தென் கொரியா ஆகிய இடங்களிலும் காணப்பட்டு உள்ளது.
.
இந்த ஆய்வின்படி இத்தாலிக்கு சென்ற கொரோனா வகை மெக்ஸிகோ நாட்டு பயணி ஒருவரிடம் இருந்துள்ளது. அந்த பயணியின் தொற்று பெப்ரவரி 28 ஆம் திகதி அறியப்பட்டு இருந்தது. அத்துடன் ஜெர்மனியில் தொழில் செய்த இத்தாலியர் ஒருவரே ஜெர்மனியில் இருந்து இத்தாலிக்கு இந்த வைரஸை எடுத்து சென்று இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இவர் ஜனவரி 27 ஆம் திகதி இத்தாலி சென்றுள்ளார்.
.
ஜெர்மன் நாட்டவர் ஒருவர் கொரோனாவை ஷங்ஹாய் நபர் ஒருவரிடம் இருந்து (Shanghai) கொரோனாவை பெற்று உள்ளார். அந்த ஷாங்ஹாய் நபர் ஜெர்மன் நாட்டவரை சந்திக்க முன்னர் வூஹான் சென்றவர்.
.