நைஜீரியா திரும்புகிறது $5.8 மில்லியன் திருட்டு பணம்

நைஜீரியா திரும்புகிறது $5.8 மில்லியன் திருட்டு பணம்

நைஜீரியாவின் முன்னாள் ஆளுநர் ஒருவர் திருடிய $5.8 மில்லியன் பணத்தை மீண்டும் நைஜீரியாவுக்கு அனுப்ப பிரித்தானியா இணங்கி உள்ளது. நைஜீரியாவின் Delta மாநிலத்தின் முன்னாள் ஆளுநர் James Ibori என்பவரிடம் இருந்தே இந்த பணம் முடக்கப்பட்டது.

1980ம் ஆண்டுகளில் பிரித்தானியா சென்ற Ibori அங்கு கடை ஒன்றில் காசாளராக பணிபுரிந்தார். அப்போது அவர் செய்த திருட்டுகள் காரணமாக 1991ம் ஆண்டு குற்றவாளியாக காணப்பட்டு இருந்தார். பின் அவர் மீண்டும் நைஜீரியா சென்று அங்கு அரசியல் குதித்தார். தனக்கு புதியதோர் பிறந்த திகதியை பயன்படுத்துவதன் மூலம் அவர் பிரித்தானிய குற்றங்களில் இருந்து தன்னை மறைத்துக்கொண்டார்.

1999ம் ஆண்டு அவர் Delta மாநிலத்தின் ஆளுநர் ஆக வெற்றி அடைந்தார். ஆளுநர் பதவியை அடைந்த அவர் பெருமளவில் திருட ஆரம்பித்தார். எண்ணெய்வளம் மிக்க Delta மாநிலத்தில் இருந்து அவர் சுமார் $117 மில்லியன் பணத்தை திருடியதாக நைஜரிய அரசு கூறுகிறது.

2005ம் ஆண்டு அவர் ஒரு தனியார் விமானம் (private jet) ஒன்றை தனது சட்டத்தரணி ஒருவர் மூலம் கொள்வனவு செய்ய முனைந்தார். அப்போது பிரிதானியா மீண்டும் அவர் மீது கவனம் செலுத்தியது. இவரை கைது செய்ய போலீசார் சென்றபோது இவரின் குண்டர்கள் போலீசாரை விரட்டி உள்ளனர்.

2010ம் ஆண்டு இவர் டுபாய் சென்றபோது மீண்டும் கைது செய்யப்பட்டு பிரித்தானியாவுக்கு எடுத்து செல்லப்பட்டார். இவர் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டு, 2012ம் ஆண்டு பிரித்தானிய நீதிமன்றில் குற்றவாளியாக காணப்பட்டார். அதனால் மீட்கப்பட்ட சிறு தொகை பணமே தற்போது நைஜீரியா திரும்புகிறது.

இந்த பணத்தை பயன்படுத்தி Lagos முதல் Ibadan வரையான Expressway அமைத்தல், Abuja முதல் Kano வரை வீதி அமைத்தல், பாலம் ஒன்று அமைத்தல் போன்ற திட்டங்கள் செய்ய பிரித்தானியாவும், நஜீரியாவும் இணங்கி உள்ளன.

இவரிடமிருந்து மிகுதி பணத்தை மீட்க மேலும் வழக்குகள் தொடர்கின்றன.