மெக்ஸிக்கோவில் 55 அகதிகள் வாகன விபத்தில் பலி

மெக்ஸிக்கோவில் 55 அகதிகள் வாகன விபத்தில் பலி

அமெரிக்காவுக்கு தெற்கே உள்ள நாடான மெக்ஸிக்கோவில் இரகசியமாக அகதிகளை ஏற்றி சென்ற பாரவாகனம் (truck) ஒன்று வியாழன் விபத்துக்கு உள்ளானதால் குறைந்தது 55 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 105 பேர் படுகாயம் அடைந்தும் உள்ளனர். இவர்கள் அமெரிக்கா நோக்கி செல்லும் Honduras, Ecuador, Nicaragua போன்ற மத்திய அமெரிக்க நாட்டவர் என்று கூறப்படுகிறது.

மெக்ஸிக்கோவின் எல்லை நாடான குவாட்டமாலாவில் இருந்தே இவர்கள் வந்திருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது. விபத்து எல்லைக்கு அண்மையில் உள்ள Chiapas என்ற மெக்ஸிக்கோ மாநிலத்திலேயே நிகழ்ந்துள்ளது. கவிழ்ந்த வாகனம் பின் மேம்பாலம் ஒன்றிலும் மோதி உள்ளது.

வேகமாக பயணித்த மேற்படி பாரவாகனம் முடக்கு ஒன்றில் கவிழ்ந்த போது அதில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த அகதிகளே பலியாகியும், காயமடைந்தும் உள்ளனர். காயமடைந்தோரில் 83 ஆண்களும், 22 பெண்களும் அடங்குவர். அதில் சிலர் சிறுவர்கள்.

மரணித்தோர், காயமடைந்தோர் தொகைகளின்படி அந்த பாரவாகனத்தில் சுமார் 160 பேர் விபத்தின்போது பயணித்து உள்ளனர்.