சீன விண்கலத்தில் எல்லா நாடுகளுக்கும் அனுமதி

ChinaSpace

சீனா தான் ஏவப்போகும் விண்வெளி ஆய்வுகூட பணிகளில் பங்கெடுக்க அனைத்து ஐ.நா. நாடுகளுக்கும் அனுமதி வழங்கவுள்ளது. இந்த செய்தியை சீனாவுக்கான ஐ.நா. தூதுவர் Shi Zhongjun திங்கள்கிழமை தெரிவித்து உள்ளார். தற்போது அமெரிக்காவின் தலைமையில் செயல்படும் ISS (International Space Station) அதன் அங்கத்துவ நாடுகளுக்கு மட்டுமே இணைந்து செயல்பட அனுமதி வழங்குகிறது.
.
Tianhe (ரிஅன்-ஹே அல்லது Harmony of the Heavens) என்று நாமம் கொண்ட China Space Station (CSS) 2019 ஆண்டில் ஏவப்படவுள்ளது. இந்த விண் ஆய்வுகூட நிர்மாண வேலைகள் 2022 ஆம் ஆண்டுவரை நடைபெறும். இதற்கான முதலீட்டை சீனாவே தற்போது செய்து வருகிறது. இந்த ஆய்வுகூடத்தில் 3 பேர் ஒரே காலத்தில் தங்கி இருக்கமுடியும். ஆய்வாளர்கள் மாறும்போது 6 பேர் தங்கலாம்.
.
அமெரிக்காவின் தலைமையில் தற்போது இயங்கும் ISS பணிகளில் சீனாவுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. அது சீனா தனது சொந்த விண் ஆய்வுகூடத்தை நிர்மாணிக்க உந்தியது.
.
இந்த ஆய்வுகூடம் 400 km (low-Earth orbit) உயரத்தில் பூமியை வலம்வரும்.
.
வியென்னாவில் (Vienna) நிலை கொண்டுள்ள ஐ.நாவுக்கான இலங்கை தூதுவர் Priyani Wijiesekera இந்த ஆய்வுகூட பணிகளில் இணைய இலங்கை ஆவலாக உள்ளதாக கூறியுள்ளார்.
.

1998 ஆம் ஆண்டு ஏவப்பட்டு தற்போது சேவையில் உள்ள ISS, சுமார் 92.49 நிமிடங்களில் பூமியை சுற்றிவரும். அதனால் நாள் ஒன்றில் இந்த ஆய்வுகூடம் 15.54 தடவைகள் பூமியை சுற்றும். இதில் 6 பேர் தங்கலாம். இதன் எடை 419,455 kg.
.