செவ்வாயில் சீனாவும் இறங்கியது

செவ்வாயில் சீனாவும் இறங்கியது

இன்று சனிக்கிழமை செவ்வாய் கோளத்தில் சீனா தனது கலம் ஒன்றை வெற்றிகரமாக இறக்கி உள்ளது. அமெரிக்காவுக்கு அடுத்து செவ்வாயில் கலம் ஒன்றை தரையிறக்கிய நாடாக சீனா அமைகிறது. கடந்த ஆண்டு ஜூலை 23ம் திகதி பூமியில் இருந்து சென்ற இந்த rover, 295 தினங்களின் பின் செவ்வாயை அடைந்து உள்ளது.

செவ்வாய் கோளத்தில் மோதி விழுவதன் மூலம் கலங்களை அனுப்பாது, பத்திரமாக இறக்குவது மிகவும் சிரமமானது. வரும் காலங்களில் மனிதரை அங்கு அனுப்புவதற்கு இந்த அறிவு அவசியம்.

Zhurong (God of Fire) என்ற பெயரை கொண்ட இந்த ஆறு சக்கர ஆய்வு வாகனம் (rover) இன்னோர் கொள்கலத்துள் வைத்து அனுப்பப்பட்டது.

தற்போது செவ்வாய் சுமார் 320 மில்லியன் km தூரத்தில் நிலை கொண்டுள்ளது. அதனால் பூமிக்கும், செவ்வாய்க்கும் இடையிலான ஒருவழி தொடர்புக்கு சுமார் 18 நிமிடங்கள் தேவை. அதனால் அனைத்து நடவடிக்கைகளும் முன்னறிவித்தல்கள் மூலமே செவ்வாயில் செய்யப்படும்.

இந்த rover கலத்தை பயன்படுத்தி சீனா 90 தினங்கள் ஆய்வுகள் செய்யவுள்ளது.

வரைபடம்: CAST