ஹார்வர்ட் வெளிநாட்டு மாணவரை கொண்டிருக்க தடை 

ஹார்வர்ட் வெளிநாட்டு மாணவரை கொண்டிருக்க தடை 

அமெரிக்க சனாதிபதி ஹார்வர்ட் பல்கலைக்கழகம் (Harvard University) மாணவ விசா மூலம் கல்வி கற்கவரும் வெளிநாட்டு மாணவரை கொண்டிருக்க இன்று வியாழன் தடை விதித்துள்ளார். ஹார்வர்ட் தனது விருப்பத்துக்கு உடன்படாத காரணத்தாலேயே ரம்ப் இவ்வாறு தடை விதித்துள்ளார்.

புதிய மாணவ வருகையை தடை செய்தது மட்டுமன்றி ஏற்கனவே அங்கு கல்வி கற்கும் மாணவரையும் வேறு பல்கலைக்கழகங்களுக்கு மாற்ற கூறப்பட்டுள்ளது. இந்த மாணவர் மாற மறுத்தால் விசா பறிக்கப்பட்டு, கைதும் செய்யப்படலாம்.

அமெரிக்க மத்திய அரசிடம் Student and Exchange Visitor Program (SEVP) என்ற ஒரு இணையத்துடன் கூடிய கட்டமைப்பு உண்டு. அதில் மத்திய அரசால் பதியப்படும் மாணவரை மட்டுமே அமெரிக்க பல்கலைக்கழகங்கள் உள்வாங்கலாம். இவர்களுக்கு மட்டுமே மத்திய அரசு மாணவ விசா வழங்கும்.

ஆனால் தற்போது ஹார்வர்ட் அந்த கட்டமைப்பை பயன்படுத்த முடியாது தடை விதிக்கப்படுள்ளது. அதனால் அது மாணவரின் விசா நிலைமையை அறிய முடியாது உள்ளது.

ஹார்வார்டில் 25% க்கும் அதிகமான மாணவர் விசா பெற்று கல்வி கற்பவர்கள். 2024ம் ஆண்டில் 27.2% மாணவரும் (அது 6,793 விசா மாணவர்), 2023ம் ஆண்டில் 26.8% மாணவரும், 2022ம் ஆண்டில் 25.8% மாணவரும் விசா மாணவரே. இவர்கள் சுமார் 140 நாடுகளில் இருந்து வருபவர்கள்.

ரம்ப் அரசு ஏற்கனவே ஹார்வர்ட்க்கு மத்திய அரசு வழங்கும் $2.2 பில்லியன் நிதி உதவியையும் இடைநிறுத்தி வைத்துள்ளது. இதை எதிர்த்து ஹார்வார்ட் வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளது.

அத்துடன் ஹார்வர்ட் கொண்டிருக்கும் வரி விலக்குகளையும் (tax-exempt) ரம்ப் அரசு நிறுத்த முயற்சி செய்கிறது.